ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திரிகா புட் கிளை நிறுவனமாக செயல்பட்ட டி.எப்.எல்., மியூச்சுவல் (புட் பிளஸ்) நிறுவனத்தை சென்னையை சேர்ந்த ராமன், இந்திரா, புவனா நடத்தினர். கலப்படமற்ற உணவு பொருள் தயாரிப்புடன் சிறுசேமிப்பு திட்டத்தையும் தொடங்கினர்.
பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர். முதிர்வு காலத்திற்கு பிறகும் தொகை வழங்காமல் நிர்வாகத்தினர் அலைக்கழித்தனர். இதையடுத்து பரமக்குடியை சேர்ந்த நாகலட்சுமியின் புகாரின்பேரில் 2018ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2022 நவம்பர் 24-ந்தேதி முதல் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் இதுவரை 496 பேர் ரூ.1.22 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மேலும் வேறு எவரேனும் முதலீடு செய்து பாதிக்கப்பட்டிருந்தால் ராமநாதபுரம் நேருநகர் 4-வது தெருவில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகார் செய்யலாம். இதன் மூலம் பணத்தை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.