ராமநாதபுரம்
சித்திரை மாத பிறப்பான இன்று, பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது என்னும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பாரம்பரிய முறைப்படி வீடுகளில் சித்திரை கனி கண்டு கொண்டாட்டத்துடன், மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் சித்திரை விஷு கனி தரிசன விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடந்தது. பின்பு கனிகளால் மூலவர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கொலு மண்டபத்தில் அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை விஷு தினத்தன்று சபரிமலையில் கைநீட்டல் வழங்குவது போலவே இங்கு வந்த பக்தர்களுக்கும் கைநீட்டல் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை குருக்கள் மோகன் சுவாமி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.