முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு(29). இவர் சிறுவயது முதல் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். வருகிற 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் வாடும் வினோத்பாபுவுக்கு லண்டன் செல்ல முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் உதவி கேட்டார்.
உடனடியாக அவர், முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத்பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவியை தி.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற வாழ்த்தினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.