உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT