பரமக்குடி
பரமக்குடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் 150இடங்களில் பொதுக்குழாய்கள், அதேபோல் 11,500வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து கொண்டுவரப்படும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 50லட்சம் லிட்டர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும் மணிநகர், கள்ளிக்கோட்டை திட்டம் மூலம் தினமும் 25லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே சிலர் வீட்டு இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். ஒருசிலர் இந்த தண்ணீரை திருடி டேங்கர்லாரிகளில் ஏற்றி வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் தண்ணீருக்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி அதன்மூலம் திருடிய தண்ணீரை குடம் ரூ.5 முதல் ரூ.10 வரை நகர் முழுவதும் விற்று வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடும் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, அந்த நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். அதேபோல் நிரந்தரமாக குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.