உள்ளூர் செய்திகள்

விதி மீறிய படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விதி மீறிய 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தொழிலுக்கு செல்லும் படகுகள் தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலாக்கம் தொடர்பாக மீன்வளத்துறையினர் நடுக்கடலில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் கடந்த ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தற்போது வரை டோக்கன் பெறாமலும் 109 விசைப்படகுகள், அனுமதியின்றி தொழிலுக்கு சென்ற 7 விசைப்படகுகள், 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் மீன்பிடித்த 21 விசைப்படகுகள் பிடிபட்டன.

இந்த படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்குக் சென்று விதிகளை மீறிய மேலும் 6 படகுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மீன்பிடி விதிகளை மீறும் படகுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் சோதனையின்போது விதிகளை மீறியதாக முதல் முறை பிடிபடும் படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், அடிக்கடி பிடிபடும் படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் என தொடங்கி அந்த படகில் கொண்டு வரப்படும் மீன்களின் எடைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் படகுகளுக்கு விசாரணை முடியும் வரை மானிய டீசல், மீன்பிடி டோக்கன் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.