இடி தாக்கி இறந்த ஆடுகளை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சாயல்குடி அருகே இடி தாக்கி 8 ஆடுகள் சாவு

சாயல்குடி அருகே இடி தாக்கி 8 ஆடுகள் பலியாயின. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சாயல்குடி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 56). இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் பனை தொழில் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் வெள்ளாடுகளை கொட்டகையில் அடைத்து வைத்தார். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சாயல்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் இடி தாக்கியதில், கொட்டகையில் இருந்த 8 வெள்ளாடுகள் பரிதாபமாக இறந்தது.

இன்று காலை தேவசகாயம் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்கொடி மற்றும் சாயல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.