பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 25-வது ஆண்டு விழா நடந்தது. முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
மாணவர்கள் தன்னம்பி க்கையுடன் உழைத்து, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். அரசுப்பணிகளுக்கு செல்ல படிக்கும் காலத்தில் இருந்தே கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மாணவிகள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் டைரியில் நீங்கள் என்ன வேலைக்கு செல்லவேண்டும் என்பதை குறித்து வைத்து தினமும் வாசித்து அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும்.
பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் காவலர் தேர்வுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பெருமையுடைய இந்த கல்லூரி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வேந்தோணி, ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ், துறைத்தலைவர்கள் ரேணுகாதேவி, அறிவழகன், கண்ணன், ஆயிஷா, மும்தாஜ் பேகம், விஜயகுமார் கிருஷ்ணவேணி, ஹரிநாராயணன், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர்.