உள்ளூர் செய்திகள்

இரணியல்-பள்ளியாடி பகுதியில் இன்று உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.உயர்மின் அழுத்தக்கம்பி அறுந்து விழுந்ததால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதன் காரணமாக அவ்வப்போது சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. தற்போது ரெயில்களை ரத்து செய்யாமல் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்தப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இன்று காலையும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் இரணியல்-பள்ளியாடி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

அந்த கம்பி தண்டவாளத்தில் விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தை விட்டு சற்று தொலைவிலேயே தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் உயர்மின் அழுத்தக்கம்பி அறுந்து விழுந்ததால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திருவனந்தபுரம் வழியாக செல்லும் ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.