புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு. குதிரைகள் ஆடியவாறே முன்னால் செல்ல பால் குடங்களோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்ற பக்தர்கள் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவாகிய நேற்று கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலரும் தங்கள் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக தலையில் பால் குடங்களை சுமந்தவாறு கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே திரண்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் 5-க்கும் மேற்பட்ட அலங்கார குதிரைகள் நடனமாட, மேள தாளங்களோடு கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். பனங்குளம், குலமங்கலம் மற்றும் வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் நகரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இன்று 8-ம் நாள் திருவிழாவாக பொங்கல் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற உள்ளது.