உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம்., எந்திரத்தில் கூடுதலாக வந்த ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்

10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே காந்திநகரில் உள்ள ஒரு ஏ. டி.எம். மையத்தில் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் பணம் எடுக்க சென்றிருந்தார். எதிர்பாராதமாக பணம் வராததால் ஏ.டி.எம். கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை எடுக்காமல் சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு பணம் எடுக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்களான முகிலன், கவுஷிக் இருவரும் பணம் எடுத்த போது கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்திருந்தது. இதனால் அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அலங்கியம் போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து ஹரிபிரசாரத்தை வரவழைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர். மேலும் கூடுதல் பணத்தை ஒப்படைத்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.