காவல் நிலையத்தில் கைதி மரணம் 
உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் கைதி மரணம்: பட்டியல் இன ஆணையத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜர்

காவல் நிலையத்தில் கைதி சந்தேக மரணமடைந்த சம்பவம் குறித்து பட்டியல் இன ஆணையத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜரானார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டியல் இனபெண் பாலியயல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிர் இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹெல்டர் தலைமையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது

இன்று காலை 11.30 மணியளவில் விசாரணை தொடங்கியது. இதில் முதலாவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கண்ணன், மாநில மனித உரிமை துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன், ஆகியோர் விசாரணைக்காக ஆஜரானார்கள்.

விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்ததில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாகவும், மரணத்திற்கு பிறகு காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆவணங்களை ஆணையத்திடம் காவல் ஆணையர் வழங்கியதாக தெரிகிறது. அதன் பின்னர் ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய பிறகு சம்பவம் நடந்த இடமான தலைமை செயலக காலனி காவல் நிலையம் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.