கீரிப்பட்டி முருகன் 
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வியாபாரியின் ரூ.22.50 லட்சம் மதிப்பிலான சொத்து முடக்கம்

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியின் ரூ.22.50 லட்சம் மதிப்பிலான சொத்து முடக்கம் செய்யப்பட்டது.

மாலை மலர்

தேனி:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஸ் டோங்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தற்போது வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மொத்தம் 335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடமலைக்குண்டு அருகே காமன்கல்லூரில் உள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கப்பட்டது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் குமணன்தொழுவை சேர்ந்த கீரிப்பட்டி முருகன் (வயது52) என்பவர்தான் கஞ்சா பதுக்கியது தெரிய வந்தது. போலீசார் அவரை கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் கைது  செய்தனர். அங்கிருந்து 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த நிலையில் கீரிப்பட்டி முருகன் கஞ்சா விற்று கிடைத்த வருமானத்தில் குமணன்தொழுவில் தனது உறவினர் பெயரில் வாங்கி வைத்துள்ள ரூ.12 லட்சம் மதிப்பிலான வீடு, ரூ.10 லட்சம்  மதிப்பிலான 4.5 செண்ட் காலி மனையிடம், ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் என மொத்தம் ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை போலீசார் முடக்கி உள்ளனர்.

கோர்ட்டு உத்தரவு பெற்று அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.