தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டு சரவண செல்வம் மற்றும் போலீசார் ஆதரவின்றி சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 53), திருவண்ணாமலை மாவட்டம் அத்திஅந்தன் போஸ்ட் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் ( 51) ஆகிய 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.
பின்னர் அவர்களை தஞ்சாவூர் மாதாகோட்டையில் உள்ள விக்டோரியா முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து நல்ல முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டனர்.