உள்ளூர் செய்திகள்

கோவை மத்திய ஜெயிலில் போலீசார் திடீர் சோதனை

கோவை காட்டூர் உதவி கமிஷனர் வின்சென்ட தலைமையில் 50 போலீசார் இன்று காலை கோவை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர்.

கோவை:

கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை ஜெயில் அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதனை மீறி சில கைதிகள் செல்போன் மற்றும் பீடி, சிகரெட்டுகளை மறைத்து வைத்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

இதனையடுத்து கோவை காட்டூர் உதவி கமிஷனர் வின்சென்ட தலைமையில் 50 போலீசார் இன்று காலை 6 மணிக்கு கோவை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.

அவர்கள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர். இந்த சோதனை 8 மணி வரை நடந்தது. சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

திடீரென 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையால் கோவை மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT