சென்னை:
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டும் 11-ம் வகுப்பு பொது தேர்வு நடத்தாமல் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்புக்கு ஆல்பாஸ் என்று அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தனியார் பள்ளியில் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து விட்டோம். இந்தச் சூழலில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேண்டாமென்றால் கொஞ்சம் நஞ்சம் படிக்கக்கூடிய மாணவர்களும் சுத்தமாக படிக்காமல் போய்விடுவார்கள்.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தவில்லை என்றால் அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணை போடுவது? போடுவீர்கள்..?
பிளஸ்-1, பிளஸ்-2 மதிப் பெண்களை கூட்டித்தான் உயர் கல்வியில் சேர்வதற்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்க முடியும்.
சில அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த வில்லை என்பதற்காக அவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்வு நடத்தாமல் இருப்பதற்கான திட்டமா என்பதை விளக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை அரசுக்கு செலுத்தியும் தேர்வு எழுதாமல் அந்த கட்டணத்தை திருப்பியும் தராமல் இருப்பது போல் இந்த ஆண்டும் செய்வதற்கான திட்டமா?
இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்த வில்லை என்றால் வருங்காலங்களில் மாணவர்கள் பல்வேறு தகுதி தேர்வு எழுதுவதற்கான தகுதியையும் திறமையையும் இழந்து விடுவார்கள் என்பதை அரசு அருள்கூர்ந்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுகள் நடத்தாமல் இருக்க திட்டம் வைத்துள்ளதை உடனடியாக கைவிட்டு மாணவர்கள் நலன் கருதி அரசு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி