திண்டுக்கல்:
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலும் வேட்பாளர்கள் காய்கறிகள் விற்றும், தேனீர் கடையில் டீ போட்டுக்கொடுத்தும், வடை சுட்டுக் கொடுத்தும், தள்ளுவண்டிகளை தள்ளியும், குப்பைகளை அகற்றியும் நூதன பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்காளர்களை கவர பரிசு பொருள் மற்றும் பணப் பட்டுவாடா வழங்கும் பணியையும் ஒருசிலர் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 47வது வார்டு பாரதிபுரம் பகுதியில் பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வேண்டாம். ரோட்டுக்கு தரம், ஓடைக்கு சுகாதாரம் வேண்டும் என கோலம் போட்டு வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே போல அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் தினந்தோறும் கோலம் போட்டு தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு நூதன வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.