பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகளுக்கும் 12 தூண்களில் 12 குபேர பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.
மேலும் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி ஆவணி மாத குபேர யாக வேள்வி நடைபெற்றது.
கணபதி ஹோமத்தோடு தொடங்கிய யாக வேள்வியில் பல்வேறு மூலிகை பொருட்கள் இடப்பட்டு மஹா பூர்ணாஹூதி, அதனையடுத்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு திரவியம், பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாரதனை நடைபெற்றது.
குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.