பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும் திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேல் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாதம் காலநீடிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.