பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுப்பன்றியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.
மேலும் மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.