கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் மக்கள் பணிகளுக்கு வெற்றி கிடைக்கும்- அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேச்சு

நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன் என அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசினார்.மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரம்பரியமிக்க இந்த நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். எனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது இந்த மாநகராட்சி தான். கடந்த 2006 -ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்றேன். இங்கு மிகவும் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

எனது சட்டமன்ற தொகுதிக்கு தேவையான சிறிய அளவிலான கோரிக்கைகளை கமிஷனரிடம் செல்போனில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுத்தேன். பெரிய அளவிலான கோரிக்கைகளை நேரில் சந்தித்து மனுவாக கொடுத்து வருகிறேன். அதற்கான நடவடிக்கை களும் நிறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்குள்ள மாமன்ற உறுப்பினர்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் மக்கள் பணிகளுக்கு வெற்றியை பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.