திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அளவில் மிகவும் பழமை வாய்ந்த ஆஸ்பத்திரியாக நிலக்கோட்டை அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது.
இங்கு கடந்த சில தினங்களாக எலும்பு முறிவு சம்பந்தமான மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவத்தை கூட தற்போது பணிபுரியும் டாக்டர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை நிலையங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி சிறந்த ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் மொத்தம் 15 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய சூழ்நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பல்வேறு வகையில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்களுக்கு வெளி நோயாளிகளாக கிராமப்புறங்களிலிருந்து வரும் நோயாளிகளை சரியாக கவனிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
எனவே உடனடியாக டாக்டர் பற்றாக்குறையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.