கூடலூரில் புதிதாக திறக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையம். 
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் நெல்கொள்முதல் செய்ய தயார் நிலையில் அலுவலகம்

வடகிழக்கு பருவமழை தொடங்கஉள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். கூடலூர் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியில் நெல்கொள்முதல் செய்வதற்கான எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது. முல்லைபெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் இந்த ஆண்டு கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் முன்கூட்டியே நடவு பணிகள் தொடங்கப்பட்டது.

இதனால் அங்கு தற்போது அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடைந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தாமதமாக நடவு பணி தொடங்கியதால் தற்போதுதான் அறுவடை நடந்து வருகிறது.

இன்னும் பல வயல்களில் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கஉள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைதொடர்ந்து கூடலூர் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியில் நெல்கொள்முதல் செய்வதற்கான எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாகவே சாலையின் இருபுறமும் விவசாயிகள் நெல்லை கொட்டி அதனை பாதுகாத்து வருகின்றனர்.

ஓரிருநாளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்துள்ளனர். இதுகுறித்து பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் தெரிவிக்கையில், தனியார் வியாபாரிகள் 62 கிலோ நெல்மூட்டை ஒன்றுக்கு ரூ.1050 முதல் ரூ.1100 வரை மட்டுமே கொடுக்கின்றனர்.

ஆனால் அரசு கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.1300 வரை கிடைக்கும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளனர் என்றார்.