திண்டிவனம்:
எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த டிரைவர் வைத்தியநாதன் ஓட்டினார். இன்று அதிகாலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் கல்லூரி அருகே ஆம்னி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் இருந்த சென்டர் மீடியன் கட்டையின் மீது ஏறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.