விவசாயிகள் கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாவிட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை : குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தமிழ்நாடு உழவன் பேரியக்கம் மாநில செயலாளர் குறிஞ்சிப்பாடி குமரகுரு பேசுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து பண்ருட்டி கடலூர் சிதம்பரம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும்.

இல்லையெனில் விவசாயிகள் விஷம் குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார். நல்லூர் சுப்பிரமணி:-எங்கள் பகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த பலருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை . இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மங்களூர் மகாராஜா:- திட்டக்குடி வெலிங்டன் ஏரியை கட்டிய வெலிங்டன் பிரபுவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். 

முன்னதாக கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி ராஜசேகர் திடீரென்று இறந்ததால் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.