சாலை நடுவே தோண்டப்பட்ட குழி 
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் சாலை நடுவே குழி தோண்டியவர்களுக்கு சட்டசபை பொதுக்குழு சம்மன்

மயானத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே திடீரென அகழி தோண்டி சாலை தடுக்கப்பட்டிருந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சி, பெல்வியூ பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே திடீரென அகழி தோண்டி சாலை தடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அரசுக்கு புகார் அளித்தனர்.

தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட அகழியை உடனே மூடிவிட்டனர். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சாலையை தடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கி விட்டு சென்றனர். பொது கணக்குக் குழுவினர் அறிவுரையை மீறி செய்ததால் அப்பகுதி மக்கள் அரசுக்குப் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எம்.எல்.ஏ.வும், சட்டசபை பொதுகணக்கு குழு தலைவருமான செல்வபெருந்தகை கூறுகையில், கடந்த மாதம் 29&ந் தேதி பொதுக்கணக்கு கு-ழுவினர் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தோம். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை முள்வேலியிட்டு தடுக்கவோ, குழிதோண்டியோ இதர வழியிலோ தடுப்பது தவறு என்றும், அவர்கள் பயன்படுத்தும் சாலையை தடுக்கக் கூடாது என்றும் கூறினேன். 

பொது கணக்குக் குழு ஆய்வு செய்து உத்தரவிட்டதற்குப் பிறகு இந்த செயல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் வருகிற 25&ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.