நெல்லை:
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இன்று காலை கே. டி.சி. நகர் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், வருகிற 31-ந் தேதி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்பட உள்ளது. இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதி சுந்தரம், தாழையூத்து மாடசாமி, மானூர் கந்த சாமி,சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.