பணகுடி:
பணகுடி அருகே உள்ள வடலிவிளையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி, கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியல் காணாமல் போயிருந்தது. இதேபோல் கலந்தபனை மற்றும் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோவில்களிலும் அதே நாளில் திருட்டு போனது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வடலிவிளை கோவிலில் சி.சி.டி.வி. காமிரா உள்ளது. அதில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். -அப்போது மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு செல்வதும், அதை கை தவறி கீழே போடுவதும், அதன்பின்னர் மீண்டும் தூக்கி செல்வதும் பதிவாகி உள்ளது.
அதனை வைத்து மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர் திருட்டை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோவில்கள் மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
ஆனால் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.