தடுப்பூசி முகாமில் நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆய்வு செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை நகர்நல அலுவலர் ஆய்வு

நெல்லை மாநகர பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதனை நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு 39 வாரங்கள் முடிவடைந்த டாக்டர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து இன்று முதல் டோஸ் போடப்படுகிறது.

மாவட்டத்தில் 16 ஆயிரத்து 800 பேர் தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தேதியில் சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி போட வேண்டியவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டி நெல்லை யில் உள்ள சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை நகர்நல அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டார். பள்ளிகளிலும் போடப்பட்ட தடுப்பூசி பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு இன்று முதல் டோஸ் போடப்படுகிறது.மாநகரில் உள்ள சுமார் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று முதல் முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் 2 டோஸ் போட்டு 273 நாட்கள் முடிந்திருந்தால் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் 78.73 சதவீதம் முதல் தவணையும், 49.15 சதவீதம் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

15 முதல் 18 வயது வரை உள்ள 76,400 சிறுவர்களில் 55 ஆயிரத்து 451 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 72.8 சதவீதம் சிறுவர்கள் பயனடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT