பாளை பெருமாள் மேலரதவீதியில் பெண் ஒருவருக்கு வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட்ட மருத்துவக்குழுவினர். 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் வீடு வீடாக பூஸ்டர் தடுப்பூசி

நெல்லையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று மக்களிடையே பூஸ்டர் போடுவதற்கு ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அனைத்து வயதினரும் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து 2 தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் இதுவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.

ஆனால் மக்களிடையே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் இல்லாத காரணத்தினால் குறைந்த அளவு மக்களே போட்டிருந்தனர். இதனால் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தும் விதமாக வாரந்தோறும் முகாம் அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

அதன் அடிப்படையில் இன்று முதல்ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடக்கிறது. 

நெல்லையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் இன்று பூஸ்டர் ஊசி போடப்பட்டது.

இதில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 2 டோஸ் போட்டு 39 வாரங்கள் முடிந்தவர்கள் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.இதனால் மருத்துவக்குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த ஆரம்பித்துள்ளனர். 

பாளை மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் குறைந்த அளவு மக்கள் வந்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுதவிர மாநகர பகுதியில் 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பூஸ்டர் டோஸ் போடப்பட்டது.

 பாளையில் பெரும்பாலான இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட ஆர்வம் இருந்து, முகாம்களுக்கு செல்ல முடியாத மக்களுக்கு வீடுகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.