கவுண்டம்பாளையம்,
பெரியநாயக்கன் பாளையம் அடுத்த வீரபாண்டி ஊராட்சியில் உள்ளது அறிவொளி நகர்.
இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்(வயது18). இவர் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று சந்தோஷ் தனது நண்பர்களான மதன்குமார், ஜெகதீஷ்குமார் ஆகியோருடன் சாமநாயக்கன் பாளையத்தில் உள்ள கல்லுக்குழிக்கு குளிக்க சென்றனர்.
அங்கு 3 பேரும் ஜாலியாக விளையாடி மகிழ்ந்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது சந்தோஷ் மேலே இருந்து கல்லுக்குழிக்குள் குதித்தார்.
இதில் அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. வெகுநேரமாகியும் சந்தோஷ் மேலே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டனர்.
வாலிபர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்களிடம் நண்பர் தண்ணீரில் மூழ்கிய விவரத்தை தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெகாடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் சுரேஷ் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கல்லுக்குழியில் இறங்கி வாலிபர் சந்தோசை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணியை தாண்டியும் மீட்பு பணியானது தொடர்ந்தது. ஆனால் தண்ணீர் அதிகமாக குளிர்ந்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
இன்று காலை தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ரப்பர் படகு மூலம் கல்லுக்குழி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய வாலிபர் சந்தோசை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.