பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(60) பால் வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு காரைக்கால் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்து விட்டு காரைக்கால் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கந்தசாமி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த
2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீசார் கந்தசாமியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பரமத்தி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.