உள்ளூர் செய்திகள்

ஏரியூர் அருகே முத்தையன் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

மாகாளயா அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.சுவாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

ஏரியூர்,

மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஏரியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற முத்தையன் சுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்தையன் சுவாமி கோவில்.

இந்த கோவிலில் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர்.

மேலும் அண்டை மாவட்டமான சேலம் மாவட்டத்தின், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து, இந்த ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நேற்று மாகாளயா அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், சுவாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள், தங்களது குழந்தைகளின் எடைக்கு எடை காசு செலுத்தி தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

SCROLL FOR NEXT