பூத வாகனத்தில் நாட்டு மடம் மாரியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தார். 
உள்ளூர் செய்திகள்

நாட்டு மடம் மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா

மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும் வழிபாடு நடந்தது.அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில்.

இந்த மாரியம்மனை திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு.

அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர்.

இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெ்ளளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடும் நடைபெறும்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 29-ந்தேதி அன்று தொடங்கியது.

இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நான்காம் நாள் மண்டகபடியான திங்கள் கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வண்ண மலர்களால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடு களை அர்ச்சரக்கட்டளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.