முக்கூடல்:
முக்கூடல் நகரில் அமைந்துள்ள நாராயணசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று 9-வது நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நாராயணரின் சப்பரத்தின் முன்பாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய வேடங்களை உயரமாக அமைத்து ஆடி, பாடி வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.