உள்ளூர் செய்திகள்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா

பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் வருகிற  23-ந் தேதி (திங்கட்கிழமை)  காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி  கிராம அளவில் கபிலர்மலை வட்டாரத்தில் இருக்கூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி,அ. குன்னத்தூர் நடுநிலை பள்ளி, பிலிக்கல்பாளையம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தொடக்க விழா நடைபெற உள்ளது. 

எனவே இந்த கிராமங்களை சார்ந்த விவசாயிகள் விழாவில் கலந்துகொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல பரமத்தி வட்டாரத்தில் மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டுப்புதூர் சமுதாய கூடம், நடந்தை, புளியம்பட்டி சமுதாய கூடம், ராமதேவம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா  நடைபெறவுள்ளது.

எனவே இந்த பகுதி விவசாயிகள் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.