உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே 2 கட்டுவிரியன் பாம்புகள் பிடிபட்டன

பரமத்திவேலூர் அருகே 2 கட்டுவிரியன் பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பெரியசூரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி சந்திரா (வயது 40). இவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது சுமார் 5 அடி நீளம் உள்ள விஷம் கொண்ட 2 கட்டு விரியன் பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து 2 கட்டு விரியன் பாம்புகள் இருப்பதாக கூறினார். அப்போது அக்கம் பக்கத்தினர் பாம்புகளை விரட்ட முயன்றனர். ஆனால் பாம்புகள் அந்த இடத்தில் இருந்து போகாததால் உடனடியாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் 2 கட்டுவிரியன் பாம்புகளையும் லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.