பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள முகாசி கிளாப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது35), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மாவுரெட்டிபட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இளநகரில் இருந்து மாவுரெட்டிபட்டி ரோட்டில் உள்ள ஓச்சாங்காடு பகுதியில் உள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பழனிசாமி யின் மனைவி சித்ரா வேல கவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.