தினசரி காய்கறி மார்க்கெட், குமாரபாளையம். 
உள்ளூர் செய்திகள்

காய்கறி மார்க்கெட்டை, வாரச்சந்தைக்கு இடமாறுதல் செய்ய வியாபாரிகள் ஒப்புதல்

குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட்டை, வாரச்சந்தைக்கு இடமாறுதல் செய்ய வியாபாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் இடம் தேர்வு செய்யப்படுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சில நாட்கள் முன்பு சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

வாரச்சந்தை அல்லது காவேரி பாலம் அருகில் உள்ள காலி இடம் ஆகியன குறித்து கருத்து கூறினார்கள். இரண்டு நாளில் முடிவாக எங்கு வைத்துக்கொள்வது என்பது குறித்து முடிவு சொல்வதாக வியாபாரிகள், குத்தகைதாரர்கள் சார்பில் கூறப்பட்டது. 

அவர்களின் முடிவை பொறுத்து, அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தற்போதுள்ள கடைகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு, குறிப்பிடும் இடத்தில் நிறுவப்படும் என்றும், புதிய கட்டுமான பணிகள் நிறைவு பெற ஒரு வருட காலம் ஆகும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது குறித்து குத்தகைதாரர் வெங்கடேசன் கூறியதாவது: 

தினசரி காய்கறி மார்க்கெட்டை வாரச்சந்தை வளாகத்தில் மாற்றுவதே தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என 70 சதவீத வியாபாரிகளும், மீதமுள்ள வியாபாரிகள் இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் மாற்றலாம் எனவும் இரு தரப்பட்ட கருத்துக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து   நகராட்சி அதிகாரிகளிடம் எங்கள் முடிவை சொல்ல உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.