நாமக்கல்:
தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு, தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகங்களில் துணை தாசில்தார் நிலையில் கண்காணிப்பாளர் பணியிடங்களும், உதவி கலெக்டர் அலுவலகங்களில் துணை தாசில்தார் நிலையில் தலைமை உதவியாளர் பணியிடங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.