உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ராசிபுரம் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாலை மலர்

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி அலுவலகம் அருகில் சேலம் -கரூர் ரெயில் பாதை செல்கிறது. இங்கு உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கை கால்கள் உடைந்த நிலையிலும், தலை நசுங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? அவர் எப்படி அங்கு வந்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இன்று அதிகாலை மும்பையிலிருந்து நெல்லைக்கு சென்ற ரெயில் அவர் மீது மோதி இருக்கலாம் அல்லது அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக இறந்தவரின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.