நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்தநிலையில் திருவிழா நடத்துவது தொடர்பாக மோகனூர் தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கு தாசில்தார் தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது. இதனால் மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்து அறநிலையத்துறையின் நாமக்கல் ஆய்வாளர், சுந்தர், தக்கார் பழனிவேல், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, எஸ்.வாழவந்தி கிராம நிர்வாக அலுவலர் கலா, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.