பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர் ஒருவர் இறங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி அதிகாலை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.  

 நேற்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த‌  பூக்குண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் தீ மிதித்தும்,  பெண் பக்தர்கள் பூ வாரி போடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  அதனை தொடர்ந்து இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இன்று காலை பக்தர்கள் அலகு குத்துதல் மற்றும் அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

நாளை (வியாழக்கிழமை) காலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், இரவு சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வரும்  நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது. 

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புதுமாரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.