பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பி.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் அருண்குமார் (24) கூலித்தொழிலாளி. அருண்குமாருக்கும் அவரது மனைவி மோனிகாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மோனிகா கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதை பரமத்தி அகதிகள் முகாமில் உள்ள அவரது மனைவியின் மாமா நகுலேஸ்வரனிடம் (42) சென்று கோபித்துக்கொண்டு சென்ற தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். அப்போது அருண்குமாருக்கும், நகுலேஸ்வரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நகுலேஸ்வரன், அருண்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த அருண்குமாரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிந்து நகுலேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.