பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரையைச் சேர்ந்தவர் வேம்படி. இவரது மகன் பாலமுருகன் (வயது18) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் ஒலிபெருக்கியை அதிக சத்தமாக வைத்து தெருவில் நின்று ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன் (41), அவரது மனைவி மணிமேகலை (36) மற்றும் ராஜா (எ) தட்சிணாமூர்த்தி (46) ஆகிய 3 பேரும் பாலமுருகனிடம் சென்று ஓலிபெருக்கியை சத்தமாக வைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
அப்போது பாலமுருகனுக்கும், முருகேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா (எ) தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேரும், பாலமுருகன் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (21) மற்றும் அவரது தாய் கலா (40) ஆகிய 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த பாலமுருகன் மற்றும் கலா ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையிலும், குமரேசன் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் மற்றொரு தரப்பை சேர்ந்த மணிமேகலை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் ராஜா (எ) தட்சிணாமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.