உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே வீடு கட்ட முயன்ற பெண்ணை தாக்கியதாக 2 பேர் சிறையில் அடைப்பு

ராசிபுரம் அருகே வீடு கட்ட முயன்ற பெண்ணை தாக்கியதாக 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாலை மலர்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பெரியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அங்காயி என்பவரிடம் வீட்டுமனை நிலத்தை வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்ய கலைச்செல்வி சென்றார். 

அப்போது புதுப் பாளையம் நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (29), பெரியாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (32) ஆகிய 4 பேரும் கலைச்செல்வி வீடுகட்டும் இடத்தில் தங்களின் சாக்கடை நீர் செல்ல இடம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஏற்பட்ட தகறாரில் அவர்கள் 4 பேரும் கலைச்செல்வியை கை, கம்பு போன்றவற்றால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த கலைச்செல்வி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், மோகன்ராஜ் இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட இருவரையும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யபின் நீதிபதி உத்தரவின் பேரில் இரு வரையும் ராசிபுரம் சிறைச் சாலையில் அடைத்தனர். 

சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதில் தலை மறைவாக உள்ள கார்த்தி மற்றும் ராஜேந்திரன் இரு வரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

தலை மறைவாக உள்ள ராஜேந்திரன் ராசிபுரம் நகராட்சியில் சானிட்டரி சூப்பர்வைசராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத் தக்கது.