நாமக்கல்:
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.