பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
இந்த வாகன சோதனை யில் பள்ளி குழந்தைகளை அனுமதியின்றி ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய அனுமதியின்றி 13 பள்ளி குழந்தைகளை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் ஆம்னி வேன், பறிமுதல் செய்யப் பட்டு பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி, தார்ப்பாய் போட்டபின் பயணத்தை தொடர அனுமதிக்கப் பட்டது. அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மேக்சி கேப் ஆகியவற்றுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.