உள்ளூர் செய்திகள்

கார் மோதி கூலித்தொழிலாளி பலி

பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி.நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவரது பின்னால் நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கார் மோதியதில் பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலை மறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.