பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தளிகை பொய்யேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள், 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதிக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக பொய்யேரி பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் மது வாங்கி குடித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார். இதனிடையே ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டு விஜய் வீட்டிற்கு வந்தபோது செல்வராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் விஷம் குடித்து இருந்ததாகவும், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.